தென்னை மரத்தின் நண்பர்கள் பயிற்சி



தூத்துக்குடி ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் இணைந்து தென்னை விவசாயிகளுக்கு ஆறு நாட்கள் தென்னை மரம் ஏறும் கருவியை பயன்படுத்தி மரம்  ஏறும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெண்கள் கலந்துக்கொண்டனர்.

            வேலையில்லா கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள்      இயந்திரம் மூலம் தென்னை மரங்களில் ஏறி வருவாய் ஈட்டவும், தென்னை மரம் ஏறுவதில் உள்ள ஆள் பற்றாக்குறையை குறைக்கும் வகையில்  தென்னை வளர்ச்சி வாரியம் “தென்னை மரங்களின் நண்பர்கள்” என்ற திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கிறது. 

            இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த ராஜபுதுக்குடி கிராமத்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள 20 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கிராமம் பாரத பிரதமர் மந்திரியின் 2022 குள்ளாக விவசாயிகளின் வருவாய் இருமடங்காக உயர்த்துதல் திட்டத்தின் கீழ் வேளாண் அறிவியல் மையம் மூலம் தத்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமம் ஆகும். அங்குள்ள விவசாயம், தோட்டக்கலை, கால்நடை சார்ந்த பல தொழில்நுட்ப பயிற்சிகள் வேளாண் அறிவியல் மையத்தின் பல்வேறு துறை விஞ்ஞானிகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னைமர விவசாயிகளுக்கு ஆறு நாள் பயிற்சி வழங்க பட்டது.  

            இப்பயிற்சியில் தென்னை சாகுபடி முறைகள், நோய்  மற்றும் பூச்சிமேலாண்மை முறைகள் மற்றும் தென்னைமர கழிவு மறுசுழற்சி போன்றவற்றிற்கும் வேளாண் அறிவியல் மைய தோட்டத்தில் செயல்விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இயந்திரத்தைக் கையாளும் முறை மற்றும் பராமரிப்பு  குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் தென்னை மரம் ஏறி அசத்தினர்.

            பயிற்சியின் ஒரு பகுதியாக, விவசாயிகள் அனைவரும் கிள்ளிகுளத்தில் உள்ள மாநில தென்னை நாற்று பண்ணைக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தென்னை நாற்றங்கால் அமைக்கும் முறை மற்றும் அதனை பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. 

            பயிற்சியின்  இறுதி நாளன்று பயிற்சி பெற்றோருக்கு தென்னை மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில்  ஜீவா என்ற பெண் 51.33 வினாடிகளில் தென்னை மரத்தில் ஏறி இறங்கி முதல் பரிசு வென்றார். இறுதியாக  6 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில்  கலந்து பயன்பெற்ற பயனாளிகளுக்கு   சான்றிதழ் மற்றும் தென்னை  மரம் ஏறும் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிகளும் வழங்கப்பட்டது.  நிகழிச்சியின் இறுதியில் பயனாளிகள் அனைவர்க்கும் தென்னை மரம் ஏறும் கருவி வழங்கப்பட்டது.